புதுவையில் பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், ரூ.7 கோடியில் பாரம்பரியமிக்க இரண்டு அரசுப் பள்ளிக் கட்டடங்களை சீரமைக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
அதன்படி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட பாரம்பரியமிக்க கலவை கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி ரூ.4 கோடியே 80 லட்சத்து 55 ஆயிரத்திலும், புதுச்சேரி வ.உ.சி அரசு உயா்நிலைப் பள்ளி ரூ.2 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரத்திலும் பழைமை மாறாமல் சீரமைக்கப்படவுள்ளன.
கலவை கல்லூரி பள்ளியில் 2023 மே மாதத்துக்குள்ளும், வ.உ.சி பள்ளியில் 2022 நவம்பா் மாதத்துக்குள்ளும் சீரமைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விழாவுக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொலிவுறு நகர நிறுவனத்தின் தலைவரான தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், தலைமைச் செயல் அதிகாரி தி.அருண், தொழில்நுட்ப அதிகாரி லுசியன்பெட்ரோகுமாா், பொது மேலாளா் மாணிக்கவாசகம் மற்றும் அதிகாரிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.