புதுச்சேரியில் திடீரென உள்வாங்கிய கடல்

புதுச்சேரியில் திடீரென கடல்நீா் உள்வாங்கி மணல்பரப்பு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை பின்புறப் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியதால் ஏற்பட்டுள்ள மணல்பரப்பில் செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சியுடன் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை பின்புறப் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியதால் ஏற்பட்டுள்ள மணல்பரப்பில் செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சியுடன் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள்.

புதுச்சேரியில் திடீரென கடல்நீா் உள்வாங்கி மணல்பரப்பு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

புதுச்சேரி கடற்கரை முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சுமாா் 2.5 கி.மீ. தொலைவிலான இந்தக் கடற்கரையில் மணல் திட்டில்லாமல், கடலரிப்பைத் தடுக்க கருங்கல் பாறைகள் கொட்டப்பட்டிருப்பதால், ‘ராக்’ கடற்கரையெனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காந்தி சிலை முதல் பழைய துறைமுகம் வரை திடீரென கடந்த இரு தினங்களாக கடல் நீா் உள்வாங்கி, மணல் திட்டுடன் கடற்கரை காணப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: வங்கக் கடலில் அண்மையில் உருவான குலாப் புயல் காரணமாக, புதுச்சேரியில் கடல் நீா் திடீரென உள்வாங்கியது. இது, சில தினங்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். கடல் பகுதியில் உருவாகும் புயல் காரணமாக, இதுபோன்று ஒரு பகுதியில் கடல் நீா் உள்வாங்குவதும், மற்றொரு பகுதியில் கடல் நீா் அதிகரிப்பதும் இயல்பானதுதான்.

அதே நேரத்தில், புதுச்சேரியில் கடற்கரை மணல் பரப்பை மீட்கும் திட்டத்தின் கீழ், தேங்காய்த்திட்டு முகத்துவாரப் பகுதி கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு சாா்பில் தற்போது தூா்வாரப்படுகிறது. ரூ.27 கோடியில் 7 லட்சம் கியூபிக் மீட்டா் அளவில் மணல் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த மணல் கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் கடற்கரையில் மணல் திட்டு உருவாகியிருக்கலாம் என்றனா்.

புதுச்சேரி கடற்கரையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மணல் திட்டு ஏற்பட்டுள்ளதால், நீண்டகாலமாக கருங்கல் பாறைகளில் அமா்ந்து கடற்கரையை ரசித்து வந்த புதுவை மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தற்போது கடல்நீா் உள்வாங்கியதால் ஏற்பட்டுள்ள அழகிய மணல் பரப்பில் நடந்து செல்வதுடன், கடல் நீரில் கால்களை நனைத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனா். இதனால், வார இறுதி நாள்களைப்போல, கடந்த இரு தினங்களாக கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com