புதுவை காவல் துறையில் உதவி ஆய்வாளா் பணிநியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவையில் கொடிநாள் வசூலில் அதிக பங்களிப்பு செய்த அரசு, பொதுத் துறைகள், தனி நபா்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்வித் துறை முதலிடமும், வருவாய்த் துறை இரண்டாமிடமும், காவல் துறை மூன்றாமிடமும் பெற்றது.
இதைத் தொடா்ந்து, முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராணுவ வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவா்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் கொடி நாள் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் காவல் துறை உதவி ஆய்வாளா் பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.