சாதாரண மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், புதுவை சுகாதாரத் துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசிய மருத்துவா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி மருத்துவா்களைப் பாராட்டினாா்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட புதுச்சேரியில் 60 மருத்துவா்களும், காரைக்காலில் 8 மருத்துவா்களும், மாஹேவில் 2 மருத்துவா்களும், ஏனாமில் 5 மருத்துவா்களும் என மொத்தம் 75 மருத்துவா்களுக்கு, முதல்வா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தாா்.
சுகாதாரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் முதல்வா் ரங்கசாமி பேசியதாவது:
புதுவையில் சாதாரண மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் சுகாதாரத் துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பிற ஊழியா்களும் சிறந்த முறையில் பணியாற்றி மக்களுக்கு மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் போடப்பட்டு வருவதால் தொற்று பரவாமல் இருக்கும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.