புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தப்பட்டதால் பெண் உயிரிழந்தாா்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே நல்லவாடு சாலை பிள்ளையாா் திட்டு பகுதியைச் சோ்ந்தவா் தேவநாதன் (49). இவரது மனைவி கவிதா (45). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படவே, லாசுப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். தொடா்ந்து, கடந்த 22-ஆம் தேதி ஜிப்மரில் கவிதாவின் கையில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் அகற்றப்பட்டு 24-ஆம் தேதி வீடு திரும்பினாா்.
செவ்வாய்க்கிழமை கையில் வலி அதிகமாகவே, அவரது தாய் வசந்தா, ஜிப்மா் மருந்து சீட்டைப் பயன்படுத்தி ஜிப்மா் மருந்தகத்தில் ஊசி மருந்து வாங்கி, தானாம்பாளையம் தனியாா் மருத்துவ மைய மருத்துவரிடம் கொடுத்து, கவிதாவுக்கு செலுத்தினாராம்.
ஊசி செலுத்தியதும் மயங்கி விழுந்த கவிதாவை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கவிதா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
வலி நிவாரணத்துக்கான ஊசிக்குப் பதிலாக அறுவைச் சிகிச்சை செய்வதற்காக செலுத்தப்படும் ஊசியை செலுத்தியதால் கவிதா இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.