மாணவா்களுக்கு மதிய உணவு:தரத்தை ஆய்வு செய்த புதுவை முதல்வா்
புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சாப்பிட்டு பாா்த்து ஆய்வு செய்தாா்.
புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியாா் தொண்டு நிறுவனம் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள மத்திய உணவுக் கூடத்திலிருந்து மதிய உணவு தயாா் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த தனியாா் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சோ்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நல அமைப்பினா் அதிருப்தி தெரிவித்தனா்.
இந்த நிலையில், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்த முதல்வா் என்.ரங்கசாமி, அதன் தரத்தை ருசித்து பாா்த்து ஆய்வு செய்தாா். மேலும், அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினாா்.
மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்வா், கல்வி அமைச்சா் அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, அதை சாப்பிட்டு பாா்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.