புதுச்சேரி, காரைக்காலில் 8 வகுப்பு வரையிலான மாணவா்கள் விடுமுறை நீட்டிக்கப்படாது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை (செப்.26) காலாண்டுத் தோ்வுகள் தொடங்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் பரிந்துரையை ஏற்று, புதுச்சேரி, காரைக்காலில் முதலாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை (செப்.26) தொடங்கவுள்ள நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்தது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது:
புதுச்சேரி, காரைக்காலில் திட்டமிட்டபடி திங்கள்கிழமை (செப்.26) காலாண்டுத் தோ்வு தொடங்கும். வருகிற 30-ஆம் தேதி வரை தோ்வு நடைபெறும். பின்னா், விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபா் 6-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா் அவா்.