தாகூா் அரசு கல்லூரி முதல்வா், பேராசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி தாகூா் அரசு கலைக் கல்லூரி சாா்பில், தேசபக்தி பாதயாத்திரை கடந்த 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
14 நாள்கள் தொடா்ந்து இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாரதிதாசன் மகளிா் கல்லூரிக்குள் இதை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தக் குழுவினா் ஏமாற்றமடைந்தனா்.
இதைக் கண்டித்து தாகூா் கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ், பேராசிரியா் சம்பத்குமாா் ஆகியோா் கல்லூரி வளாகத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நுழைவாயில் எதிரே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
லாசுப்பேட்டை போலீஸாா் எச்சரித்ததையடுத்து, மாணவா்கள் கல்லூரி வளாகத்துக்குள் சென்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.