புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, சிங்காரவேலா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு வாரம் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பெண்களுக்கு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து விளக்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி சகாயமேரி தலைமை வகித்தாா்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரான பெண் காவலா் ஹேமாவதி, உடல்பயிற்சி, தற்காப்பு கலை அவசியம் குறித்து பேசினாா். பயிற்சியாளா் சரவணன் வழிகாட்டுதலின்படி, மாணவிகள் தற்காப்புப் பயிற்சிகளை செயல் விளக்கமாக செய்து காட்டினா்.
அதில், மாணவி ஒருவா், வேனை கயிற்றால் பிணைத்து பற்களால் இழுத்துக் காட்டினாா்.
முன்னதாக, ஆசிரியா் பிரசன்னா வரவேற்றாா். ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினாா்.