புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் தீமிதி திருவிழாவில் கரகத்துடன் அக்னி குண்டத்தில் விழுந்த பக்தர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அருகேயுள்ள சின்ன கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், தீபாரத்தனையும் காண்பிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்வதற்காக தீமிதித்தனர். முதலில் சக்தி கரக புறப்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் தீ மிதித்து வந்தனர். பின்னால் கரகம் எடுத்து வந்த பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவரது பின்னால் வந்த பக்தர்களுக்கும் தவறி விழுந்ததில், நெருப்பு பொறி பறந்து கூடியிருந்த 4 பக்தர்கள் மீது பட்டதால் பதட்டம் நிலவியது.
உடனடியாக காயம் அடைந்தவர்களை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.