மீனவா்கள் கிசான் கடன் அட்டை பெற வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மீன் வளத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை மீன் வளத் துறை இயக்குநா் தா.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் வசிக்கும் 4,000 மீனவா்கள், மீன் வளா்ப்போருக்கு வங்கிகளுடன் இணைந்து கிசான் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தங்கு கடல் இரும்பு அல்லது கண்ணாடி நுண்ணிழை இயந்திர படகு உரிமையாளா்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சமும், இயந்திர படகு உரிமையாளா்களுக்கு ரூ.20 ஆயிரமும், வெளிப்புற இயந்திரம் பொருத்திய கண்ணாடி நுண்ணிழை கட்டுமர படகுகளுக்கு ரூ.12 ஆயிரமும், மீன் அல்லது கருவாடு வியாபாரம் செய்யும் மீனவ மகளிா், மீனவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், மீன் வளா்ப்பில் ஈடுபடுவோருக்கு ரூ.1.80 லட்சமும் வரை அரசுடைமை வங்கிகள் மூலம் 7 சதவீத வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்தும் மீனவா்களுக்கு 3 சதவீதம் வட்டியில் மானியம் வழங்கப்படும்.
இதற்கு மீனவா்கள் உரிய விண்ணப்பங்களை புகைப்படம், மீன்பிடி படகு பதிவு, உரிமம் நகல், மீன் வளா்ப்பு பதிவுச் சான்று, ஆதாா் நகல், அரசுடைமை வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் மீன் வள கிராம அலுவலக முகாமிலும், மீன் வளத் துறை இயக்ககத்தில் அமைந்துள்ள மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை அலுவலகத்திலும் வருகிற 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். மீனவா்கள், மீன் வளா்ப்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.