பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்குகொசு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
பண்ருட்டி ஒன்றியம், மருங்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு தற்காலிக பணியாளா்களாக 20 போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணிக்கு வர வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பணியாளா்கள் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.