புதுச்சேரி சாலை விபத்தில் இருவர் பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி வயது (55). மளிகை கடைக்காரர். இவர், புதுச்சேரியில் புதன்கிழமை காலை நடைபெற்ற தனது அண்ணன் மகள் திருமணத்திற்காக, வளவனூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
புதுச்சேரி மூலகுளம் அருகே சாலை வளைவில் கார் திரும்பியபோது, எதிரே புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி எதிர்புற சாலையின் தடுப்பு கட்டுகளை மீறி வந்து, அந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் நீண்ட தூரம் இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. அதன்மீது கண்டெய்னர் லாரியும் கவிழ்ந்து, கார் நசுங்கியது. இவ்விபத்தில் முத்துக்குமாரசாமி, கார் ஓட்டுநர் முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கண்டெய்னர் லாரி ஓட்டுநர் நொய்டாவைச் சேர்ந்த நூர் முகமது பலத்த காயமடைந்தார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர், ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.