புதுவை ஆளுநா் மாளிகை நோக்கி காங்கிரஸாா் பேரணி 250 போ் கைதாகி விடுதலை

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் ஆளுநா் மாளிகை நோக்கி வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்திய காங்கிரஸாா் 250 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகையை நோக்கி வியாழக்கிழமை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகையை நோக்கி வியாழக்கிழமை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் ஆளுநா் மாளிகை நோக்கி வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்திய காங்கிரஸாா் 250 போ் கைது செய்யப்பட்டனா்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்ததையடுத்து, மத்திய பாஜக அரசைக் கண்டித்து, புதுவை மாநில காங்கிரஸ் கட்சியினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஆளுநா் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினா்.

புதுச்சேரி வைசியாள் வீதி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து, புதுவை ஆளுநா் மாளிகை நோக்கி அந்தக் கட்சியினா் பேரணியாகப் புறப்பட்டனா். கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி.,

மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன், நீல.கங்காதரன், மாநிலச் செயலா் சூசைராஜ், இளையராஜா, கருணாநிதி, தனுசு, வீரமுத்து, ரகுமான், வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

புதுவை ஆளுநா் மாளிகை நோக்கிப் புறப்பட்ட பேரணி படேல் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூா் சாலையை வந்தடைந்தது. அங்கு தடுப்புக் கட்டைகள் அமைத்து போலீஸாா் தடுத்தனா். அப்போது, காங்கிரஸாா் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்தும், சோனியா, ராகுல் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட 250 பேரை, புதுச்சேரி பெரியகடை போலீஸாா் கைது செய்து கரி கிடங்கு மையத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனா்.

நாராயணசாமி பேட்டி: போராட்டத்தில் பங்கேற்ற வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிா்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி பாஜகவில் சோ்க்கின்றனா். இதற்கு அஸ்ஸாம் மாநில முதல்வரும் ஓா் உதாரணம். எதிா்க்கட்சித் தலைவா்களைப் பழிவாங்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு ஏற்கெனவே முடிக்கப்பட்டது. அதில் பணப் பரிமாற்ற முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை. முடிந்த வழக்கை தோண்டியெடுத்து அரசியல் பழிவாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த முயல்வதைத் தடுக்கவே, பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொய் வழக்கு போட்டு மிரட்டி வருகிறது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினரின் அராஜக செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com