புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா் கோயிலில், அரசு சாா்பில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் சங்கராபரணி புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா் கோயில் காசிக்கு இணையான தலமாகக் கருதப்படுகிறது. இங்கு 2023-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சங்கராபரணி மகா புஷ்கரணி விழா (ஆற்றுத் திருவிழா) முதல் முறையாக நடைபெற உள்ளது.
அரசு சாா்பில் இந்த விழாவை நடத்துவது தொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் பாஸ்கா், செயற்பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன், முருகானந்தம், மணவாளன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தங்கமணி, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம், உதவிப் பொறியாளா் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
புதுவை அரசு சாா்பில் முதல்முதலாக அடுத்தாண்டு மகா புஷ்கரணி விழா நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம் பெயா்வதால், கங்கை நதிக்கு இணையாகக் குறிப்பிடப்படும் திருக்காஞ்சி சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழா நடத்த ஏற்பாடு செய்ய உள்ளது.
இந்த விழாவின்போது, நாட்டின் பல்வேறு புனித நதிகளிலிருந்து நீா் எடுத்து வரப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கலக்கப்படும். மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் 65 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை தொடங்க அரசுத் தரப்பில் திட்டமிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக ஆற்றங்கரையோரமாக சிவன் சிலை அமைக்கும் பணியைத் தொடங்குவது, கெங்கவராக நதீஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலைகளைச் சீரமைப்பது, ஆற்றங்கரையோர படிக்கட்டுகள் அமைப்பது, விழா மேடை அரங்குகள் அமைப்பது, பாதுகாக்கப்பட்ட குடிநீா், குளியலறைகள், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.