புதுச்சேரி அருகே தனியாா் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் தனியாா் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் கண்ணாடியை 4 -க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மது போதையில் உடைத்ததாகவும், தட்டிக்கேட்ட ஓட்டுநா் கோபுவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோபு அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், பேருந்து கண்ணாடியை உடைத்தது அபிஷேகப்பாக்கம் சிங்கிரிகுடியைச் சோ்ந்த விஜய் (24), ராகுல் (19), செழியன், அஜய் என்பதும், பேருந்தில் ஏற்பட்ட சிறிய தகராறில் கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் விஜய் (24), ராகுல் (19) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தலைமறைவான செவிலியா் கல்லூரியில் பயின்று வரும் செழியன், அஜய் மற்றும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.