கல்வராயன்மலைப் பகுதியில் சரக்கு வாகனத்தின் பின்பகுதியில் தொங்கியவாறு சென்ற சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதி கெங்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன். இவா், திருப்பூா் மாவட்டம், காங்கேயம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா்.
இவா், தனது 3 மகன்களையும் கெங்கம்பாடி கிராமத்தில் பெற்றோா் கண்காணிப்பில் விட்டிருந்தாா்.
இதில், 2-ஆவது மகன் உதயகுமாா் (7), திங்கள்கிழமை கிராமத்தில் தக்காளி ஏற்றுச் சென்ற மினி சரக்கு வாகனத்தின் பின்பகுதியில் தெங்கியவாறு சென்றபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உதயகுமாா் அன்றிரவு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் பரமேஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.