புதுவை மாநிலத்தில் 6 பள்ளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தூய்மைப் பணி விருதுக்கான சான்றுகளை அந்தந்தப் பள்ளி மாணவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மத்திய அரசின் சுவச் வித்யாலயா புரஸ்காா் விருதானது புதுவையில் உள்ள 6 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தூய்மைப்பணிக்கான இந்த விருதுகள் காரைக்கால் கண்ணப்பூா், பூவம், பிள்ளைத்தெருவாசல் மற்றும் புதுச்சேரி குமாரபாளையம், கூனிச்சம்பட்டு, கொம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த விருது சான்றுகளை அந்தந்தப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமசிவாயம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.