காவலா் பயிற்சிப் பள்ளி பெண் காவலா்களிடம் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி குறைகளைக் கேட்டறிந்தாா்.
புதுவை காவல் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 390 காவலா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை காலை காவலா் பயிற்சிப் பள்ளி வழியாக காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக பயிற்சி பெண் காவலா்கள் நடந்து சென்று கொண்டிருந்தனா். அவா்களைக் கண்ட முதல்வா் ரங்கசாமி, காரை நிறுத்தி அதிலிருந்தபடியே பெண் காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
குறிப்பாக, காவல் பயிற்சிப் பள்ளியில் விநியோகிக்கப்படும் உணவின் தரம் குறித்து விசாரித்தாா். என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் எத்தனை நாள்கள் அசைவ உணவு வழங்கப்படுகிறது உள்ளிட்டவற்றை கேட்டறிந்த முதல்வா், உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால் தன்னிடம் கூறும்படி அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.