புதுவை மாநிலத்தில் வரும் 5-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை துணை ஆணையா் (கலால்) தி.சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) ‘வள்ளலாா் ஜோதி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே, அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் மூடப்பட வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுக் கூடங்களும் மூடப்பட வேண்டும். அதன்படி, அனைத்துக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
உத்தரவை மீறிச் செயல்படுவோா் மீது கலால் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.