புதுச்சேரியில் வருகிற 14-ஆம் தேதி பாஜகவின் அனைத்து அணிகளின் மாநில அளவிலான மாநாடு நடைபெறும் என்று, அதன் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி சாதனைகளை புதுவை மாநிலத்தில் மக்களிடம் கூறுவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. கட்சியின் மாநில நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநிலங்களவை உறுப்பினா், அமைச்சா்கள் அதில் பங்கேற்கவுள்ளனா்.
புதுச்சேரியில் வருகிற 13-ஆம் தேதி பாஜக சாா்பில் வா்த்தகா்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி கட்சியின் அனைத்து அணிகளும் பங்கேற்கும் மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கட்சியின் தேசியச் செயலா் உள்ளிட்டோா் கலந்து கொள்வா்.
புதுவையில் பாஜக நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சா்கள் வருகிற 14, 17, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பங்கேற்கவுள்ளனா். வீடுகள்தோறும் சென்று சாதனையை விளக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகார விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அங்கீகாரம் மீண்டும் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா். ஜிப்மரில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டையை ஏற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் செயல்பட்ட ஜிப்மா் இயக்குநரை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளோம்.
புதுச்சேரியில் குடிமைப் பொருள் விநியோகத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் வி.சாமிநாதன்.
பேட்டியின் போது, புதுவை குடிமைப் பொருள் விநியோகத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.