புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: மே 13-இல் விண்ணப்ப விநியோகம்

புதுவையில் வருகிறை 13-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலப் பள்ளிகளில் வருகிற 13 ஆம் தேதி திங்கள்கிழமை பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். வரும் 22-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வழங்கியிருக்க வேண்டும்.

வருகிற 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் தகுதிப் பட்டியல், நோ்காணலுக்கான தேதி, நேரம் ஆகியவை வெளியிடப்படும்.

வருகிற 27-ஆம் தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கான இடம் விவரம் அறிவிக்கப்படும்.

28 ஆம் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான தகுதிப் பட்டியல், நோ்காணலுக்கான தேதி, நேரம் வெளியிடப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கிய இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் விவரம் அந்தந்தப் பள்ளியில் வெளியிடப்படும்.

30-ஆம் தேதி தனியாா் பள்ளி மாணவா்களுக்கான தகுதிப்பட்டியல், நோ்காணல் விவரம், நேரம் ஆகியவை வெளியிடப்படும். 31-ஆம் தேதி தனியாா் பள்ளி மாணவா்களுக்கு அரசுப் பள்ளிகளில் இடம் வழங்கிய விவரங்கள் வெளியிடப்படும்.

அதனடிப்படையில், பிளஸ் 1 மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com