சுற்றுச்சூழல் பாதுகாப்பை மாணவர்களிடம் உணர்த்த வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்படை ஆகியவை சார்பில் மாவட்ட அளவில், பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சரவணன் வரவேற்றார்.
முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
சுற்றுச்சூழலைபாதுகாப்பதன் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்த வேண்டும். இயற்கை வளங்கள் குறித்தும், அதனை அழியாமல் பாதுகாப்பது குறித்தும் விளக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும். இதனை, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தங்கராஜ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும், விழுப்புரம் அரசு கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ஆர்.நிசார் மழை நீர் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து கருத்துரை வழங்கினர்.
நிறைவாக, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பராமரிப்பு குறித்து விளக்கப்பட்டது.