விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்துவோர், வண்டல் மண் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் எச்சரித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக கனிமங்களை எடுத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வருவாய்த் துறையினர், கனிம வளத் துறையினர், காவல் துறையினரால், கடந்த ஜூன் மாதம் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஆற்றுப் புறம்போக்கு, அரசு நிலங்கள், பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி
கனிமம் ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக, 64 லாரி மற்றும் டிராக்டர்களும், 158 மாட்டு வண்டிகளும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, கனிமவள விதிகளின்படி, அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.20 லட்சத்து 67 ஆயிரத்து 623 வசூலிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 128 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, உரிய அனுமதியின்றி கனிமம் கடத்தும் வாகன உரிமையாளர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
தொழில் துறை அரசாணைப்படி, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்துவது கனிம விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றாகும்.
அனுமதி பெறாமல் பெரும்பாலான செங்கல் சூளைகள் இயங்குவது கவனத்துக்கு வந்துள்ளது. ஏரிகளில் விவசாய நிலங்களுக்கு கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை தவறாக பயன்படுத்தி செங்கல் தொழிலகத்துக்கு மண் எடுத்துச் செல்வதாக புகார் வரப்பெற்றுள்ளது.
ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்துபவர்கள் மீதும், வண்டல் மண் எடுப்பு திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி செங்கல் சூளைக்காக மண் எடுத்து செல்பவர்கள் மீதும் கனிம விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அதில் எச்சரித்துள்ளார்.