விழுப்புரம் அருகே பணியின்போது சீருடையில் இல்லாத உதவி காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. ஞாயிற்றுக்கிழமை அதிரடி உத்தரவிட்டார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விழுப்புரத்திலிருந்து கண்டமங்கலம் வழியாக போலீஸாரின் பணிகளை கண்காணிக்க ரோந்து சென்றார்.
அப்போது, வளவனூர் அருகேயுள்ள கெங்கராம்பாளையம், மதுவிலக்கு சோதனைச்சாவடி பகுதியில் திடீரென நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் பணியில் இருந்தனர். ஆனால், உதவி ஆய்வாளர் சீருடையில்லாமல், சாதாரண உடையில் இருந்துள்ளார்.
டி.ஐ.ஜி.யை கண்டதும் உதவி ஆய்வாளர் சீருடையை அணிய முயன்றாராம்.
பணியின்போது சீருடையில் இல்லாத உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியனை விழுப்புரம் ஆயுதப்படைக்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார்.