விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம், சிவன்படைத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(29). மீன் வியாபாரி. இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்தபோது, எதிரே விழுப்புரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அரவிந்த்குமார்(23), ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த தமிழ், சந்துரு (23) ஆகியோர் வந்த பைக் மோதியதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக்கை மூவரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திக் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கு வந்த கார்த்திக், அரவிந்த்
குமார் தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மோதிக்கொண்டனர். இதனை தடுக்க முயன்ற விழுப்புரம் மேற்கு போலீஸாரையும் அவர்கள் தாக்க முற்பட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக கார்த்திக்கின் தம்பி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து அரவிந்த்குமார், சந்துரு ஆகிய இருவரை கைது செய்தனர். கவி என்பவரை தேடி வருகின்றனர்.