செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமைக் கழகம் சார்பில் நடைபெற்ற பூப்பல்லக்குப் பெருவிழாவை முன்னிட்டு, செஞ்சி குளக்கரை மாரியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அங்காளம்மன் கோயிலில் இருந்து அக்னி சட்டியை ஏந்தி பக்தர்கள் குளக்கரை மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தாரை - தப்பட்டை முழங்க 108 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.
பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு கரகாட்டம், பச்சைக்காளி, பவளக்காளி, நையாண்டி மேளம், வாண வேடிக்கையுடன் மாரியம்மன் பூப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
விழாவில் செஞ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செஞ்சி மஸ்தான், திமுக ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமைக் கழகத்தினர் செய்திருந்தனர்.