தமிழக அரசு கருவேல மரங்களை அகற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர், சாரம் கிராமத்தில், சனிக்கிழமை காலை மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையிலான கட்சியினர், கிராம பொது மக்கள் சேர்ந்து அப்பகுதியிலிருந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியைத் தொடங்கினர்.
இதில், பங்கேற்று கருவேல மரங்களை வெட்டி அகற்றிய வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் அரசுக்கு தமிழக நலனில் அக்கறை இல்லை என்று பொருளாகும். தமிழ்நாட்டில் கடந்த 1960-ஆம் ஆண்டு வேலிக்காக சீமைக் கருவேல மரங்களின் விதைகள் கொண்டுவந்து நடப்பட்டன.
அப்போது, அதன் ஆபத்து யாருக்கும் தெரியவில்லை. சீமைக் கருவேல மரங்கள் இருந்தால் மழை வராது. நிலத்தடி நீரை உறிஞ்சும். அதை அழித்தால் தான் மழை பெய்யும். பிராண வாயுவை உறிஞ்சி, கரியமிலவாயுவை கருவேல மரங்கள் வெளியிடுகின்றன. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டியது அவசியம் என்றார்.