உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநாடு திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12-ஆம் தேதி விழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருக்கல்யாணம் 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெற்றது. திரௌபதி அம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தின்போது சேந்தநாடு, தொப்பையான்குளம், வானம்பட்டு, மட்டிகை, ஒல்லியாம்பாளையம், ஆண்டிக்குழி, களத்தூர் உள்பட
20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மே 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சியும், மே 20-ஆம் தேதி காலை 6 மணிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் இரவு வேளையில் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை முழங்க வீதியுலா நடைபெற்றது.