விழுப்புரம் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் அருகே வந்த அந்த பேருந்து விழுப்புரம் நகருக்குள் திரும்ப முயன்றது. அப்போது சென்னையிலிருந்து கேரளமாநிலம் கொச்சியை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இந்த அரசுப் பேருந்தின் மீது மோதியது. இதில் அரசுப் பேருந்தின் நடுப் பகுதியும், தனியார் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தன. இந்த விபத்தில் இரு பேருந்துகளில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸார், நெடுஞ்சாலை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு, முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.