விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம், செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் அறக்கட்டளை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவர் டி.பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ராஜாராமன், வெங்கடசாமி, துணைச் செயலர் ரங்கநாதன், ராஜாராமன், விஜயகுமார், பாலசுப்பிரமணியன், தண்டபாணி, மகேஸ்வரன், நடராஜன், சுந்தர்பாபு, மணிவண்ணன், ஏழுமலை, லோகநாதன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
2017-18-ஆம் ஆண்டு கரும்பு அரைவை பருவத்துக்கு, டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், வெட்டி அனுப்பும் கரும்புக்கு 14 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும், தவறினால், 18 சதவீதம் வட்டி கணக்கிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,
விவசாயிகளுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்காமல் உள்ள கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு டன் கரும்புக்கு, ஒரு கிலோ சக்கரையை கட்டுப்பாடுகள் இன்றி வழங்க வேண்டும்.
கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர், டிப்பர் வாகனங்களுக்கு ஒரே சீரான வாடகை, ஓட்டுநர் மாமுல் தொகையை ஆலை நிர்வாகமே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும், கரும்பு விவசாயிகள் பயிரிடும் பகுதிகளில் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் தட்டுப்பாடின்றி செய்ய வேண்டும், ஏக்கருக்கு 2 மூட்டை டிஏபி உரத்தை இலவசமாக வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், கரும்பு விதைக் கரணைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.