அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்னா
ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தர்னா செய்தனர்.
பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கு.ஐயாக்கண்ணு வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் தி.கிருஷ்ணசாமி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்குமரன் தொடக்க உரையாற்றினார்.
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல சங்க மாவட்டத் தலைவர் எம்.புருஷோத்தமன், பொதுத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் என்.மேகநாதன், மாவட்டச் செயலர் ரத்தினம் கோரிக்கை வலியுறுத்திப் பேசினர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலர் ஆ.பக்கிரிசாமி நிறைவுரையாற்றினார்.
மத்திய அரசு வழங்கியதைப் போல தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு கடந்த 2016-ஜனவரி முதல் 21 மாதங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,850 லிருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பணியாளர்களுக்கு வழங்கும் பாதி அளவாக, ஓய்வூதியர்களுக்கு 50 சதவீத நிதிப் பயனளிக்கும் மத்திய அரசின் ஊதிய அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
மருத்துவப் படியை ரூ.1,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 20 ஆண்டுகள் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் பலர்
கலந்துகொண்டனர்.