செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் இளைஞரைத் தாக்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
செஞ்சி அருகேயுள்ள மேளச்சேரி புதுக்குளக்கரை இருளர் பகுதியைச் சேர்ந்த சேகர், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இருளர் சமூகத்தைச் சேர்ந்த நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் ராஜா கடந்த
10-ஆம் தேதி காலை செஞ்சி பேருந்து நிலையத்தில், அவரது நண்பர்கள் குமார், நாகராஜ் ஆகியோருடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் அசோகன், நாகராஜை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட ராஜா உள்பட 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து 3 பேரையும் அனுப்பியுள்ளார். அவர்கள் 3 பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பலத்த காயமடைந்த ராஜா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மிரட்டல் விடுத்த உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.