திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.14 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலூரில் 1911-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட நாட்டாண்மை கழகம் சார்பில் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது.
பின்னர் 2009-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 170 மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. குறிப்பாக, இங்கு நான்கு வகுப்பறைகள் மற்றும் இரு வகுப்பறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் மட்டுமே உள்ளன.
இதில், நான்கு வகுப்பறைக் கட்டடத்தில் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளும், இரண்டு வகுப்பறைக் கட்டடத்தில் 5 முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளும் பயில்கின்றனர்.
7 மற்றும் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைக் கட்டடம் இல்லாததால், நான்கு வகுப்பறைக் கட்டடத்திலும், இரண்டு கட்டடங்களிலும் மாறிமாறி அமரவைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு, எம்எல்ஏ க.பொன்முடி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில் தற்போது அதற்கானப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி இன்னும் 2 மாதத்துக்குள் முடிந்து, செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.