பள்ளத்தில் வேன் கவிழ்ந்து எஸ்.ஐ. உள்பட 13 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
சென்னை கொரட்டூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டுச் சென்றனர். வேன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் உஷா (46), மாரிமுத்து (44), மாரியப்பன் (46), ராமலட்சுமி (77), திருமேனியம்மாள் (75), கோவிந்தராஜ் (38), தர்மராஜ் (76), சரளா (46), பிச்சமுத்து (56), சண்முகராஜ் (48) உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக அனைவரும் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து திருநாவலூர் காவல் ஆய்வாளர் பி.ராஜேந்திரன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.