தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடுபவர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில், தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் திட்ட அளவிலான சங்கப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், செந்தில், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டச் செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்காக செயல்படக்கூடிய கட்சி திமுக. மின் துறை தொமுசவும் திமுகவும் இணக்கமாக இருந்து செயல்பட்டு வருகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே செயல் தலைவரான மு.க.ஸ்டாலினும் தொழிலாளர்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுபவர். போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, மின் தொழிலாளர் பிரச்னை, அமைப்பு சாராத் தொழிலாளர் பிரச்னை என அனைத்து தொழிலாளர் பிரச்னைகளிலும் தொழிலாளர் நலனுக்காக ஸ்டாலின் செயல்பட்டுள்ளார் என்றார் க.பொன்முடி.
தொமுக மின் கழக பொதுச் செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி, திட்டச் செயாலளர் ஜெயச்சந்திரன், திட்டப் பொருளாளர் பன்னீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகிகள் அனில்குமார், வள்ளல்பிரபு, ராம்குமார், ஏழுமலை, ராசையன், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டச் செயலாளர் தேசிங்கு நன்றி கூறினார்.