உளுந்தூர்பேட்டை அருகே சேறும், சகதியுமாகக் காணப்படும் மண் சாலையை, தார் சாலையாக மாற்றக் கோரி, அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட உளுந்தாண்டார்கோயில் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மேற்குத் தெரு, அம்மன் தெருவில் உள்ள சாலை, மண் சாலையாக உள்ளது. மழைக் காலங்களில் இந்த சாலை தண்ணீர் தேங்கி, சேறும்
சகதியுமாகி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். இந்த சாலையை தார் சாலை அல்லது சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும், இப்பகுதிக்கு மாதத்துக்கு இரு நாள்கள் மட்டும் குடிநீர் வழங்கும் பேரூராட்சி நிர்வாகம், தினமும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள், சேறும் சகதியுமாகக் கிடந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, இனியும் தாமதிக்காமல் தார் சாலை வசதியும், சீரான குடிநீர் வசதியும் அதிகாரிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.