கோதண்டராமர் சுவாமி சிலை ஏற்றிய லாரி திண்டிவனம் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டது.
பெங்களூரு வி.ஆர்.புரம் கோதண்டராமர் கோயிலில் பிரம்மாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராம பாறை குன்றிலிருந்து, 64 அடி நீளமும், 26 அடி அகலமும் கொண்ட பெரும்பாறை லாரி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
கொரக்கோட்டையில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டு 25 கி.மீ வந்த வாகனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை கடை வீதியில் வியாழக்கிழமை மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.
குறுகலான அந்தப் பகுதியில் இருந்த 40 கடைகள், வீடுகளின் முகப்பு லாரி செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் சிறிதளவு இடிக்கப்பட்டன. இதையடுத்து, கடை வீதியை வியாழக்கிழமை இரவு லாரி கடந்தது.
பின்னர், ஊருக்கு வெளியே லாரி நிறுத்தப்பட்டது.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில், கோயில் நிர்வாகம் சார்பில் இடிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
மேலும், லாரியின் 240 டயர்களில், 8 டயர்கள் பழுதடைந்ததையடுத்து, அவை மாற்றப்பட்டன.
வெள்ளிமேடுப்பேட்டை கூட்டுச் சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி, வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் புறப்பட்டது.
அங்கிருந்து 3 கி.மீ. தொலைவு வந்த நிலையில், வடசிறுவலூர் கிராமத்தில் லாரி நிறுத்தப்பட்டது.
மின் வாரியத்துக்கு ரூ.3.5 லட்சம், கடைக்காரர்களுக்கு நிலுவை என மொத்தம் ரூ.17 லட்சம் வழங்கவில்லை என்பதால், லாரி வழியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு, நிர்வாக தரப்பில் அந்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, லாரி மீண்டும் புறப்பட்டது.
பின்னர், திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலையில் தீவனூர் சந்திப்பில் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
திண்டிவனம் டிஎஸ்பி திருமால் மற்றும் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.