விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி. யாக சென்னை மேற்கு ஆணையர் சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை ஒருங்கிணைத்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன், சட்டம்-ஒழுங்கு பாதுகாத்தல், குற்றங்களைக் குறைத்தல் போன்ற விவகாரங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், உயர் கல்வி படிப்பதற்காக கடந்த செப்டம்பர் 2-ஆம் வாரத்தில் லண்டனுக்கு, புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு, அந்த பதவி காலியாக இருந்து வந்தது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் சரகத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விழுப்புரம் மாவட்டம் ஆரோவிலுக்கு வருகை தர உள்ள நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமாரை தமிழக அரசு வியாழக்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளது.