விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலை இரு தனியார் சொகுசுப் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 28 பயணிகள் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி அருகே வந்த அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக, சாலையோரம் கட்டப்பட்டு வரும் தடுப்புக் கட்டை மீது மோதி நின்றது. அப்போது, இந்த பேருந்து மீது, அதே திசையில் உடன்குடியிலிருந்து வந்த மற்றொரு தனியார் சொகுசுப் பேருந்து மோதியது. இதில், இரு பேருந்துகளும் சாலையோரப் பள்ளத்தில் சாய்ந்தன.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அழகுவேலன்(38), இந்துமதி (34), அழகுவேலன் மகன் கவுதமன் (5), சுந்தரபாண்டியன் மகன் ஜோஸ் (32), அவரது மனைவி ஷாலி (29), அருள் (29), அவரது மனைவி சுபலட்சுமி (20), வெங்கடேசன் (49), ராணி (48), ரங்கேஷ் (34), நாகப்பன் மகன்ஜெய்பகவத்(39), செந்தில் அரி (32), சுயம்பு மகன் முருகன்(30) உள்பட 28 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.