விவசாய நிலங்களுக்கு ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க ஜமாபந்தியில் ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க விவசாய நிலங்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி விவசாயிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, உடனடியாக உத்தரவு ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி மூலம் இதுவரை சுமார் 50 விவசாயிகளுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவதோடு, நீர்நிலைகள் ஆழப்படுத்தப்படுவதால் மழைநீரை போதுமான அளவுக்கு சேகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், கண்டாச்சிபுரம் வருவாய் தீர்வாய அலுவலருமான பிரியா தெரிவித்தார்.