விழுப்புரம் நகரில் சாலை விதிகளை மீறி இயக்கிய 12 ஷேர் ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகரில் விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடமும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ் உள்ளிட்டோர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விழுப்புரம் நகரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களைக் கண்காணித்தனர்.
இதில், அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோக்கள், முறையான ஆவணங்கள் இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்தம் 12 ஷேர் ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுபோல தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.