விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேடு கிராமத்தில் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ராமகிருஷ்ணா கல்விக் குழுவின் பொருளாளர் லோகையன் முகாமைத் தொடக்கி வைத்தார். கல்விக் குழுச் செயலாளர் பழனிவேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாட்சா வரவேற்றார்.
முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சூரியநாராயணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த முகாமில் மரக்கன்று நடுதல், கோயில் உழவாரப் பணி, பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டது.
நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப் பணி திட்ட உதவி அலுவலர் கண்ணபிரான் நன்றி கூறினார்.