உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் சென்னையைச் சேர்ந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சிவா(33). கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 3-ஆம் தேதி அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு கோவையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார். சிவா வீட்டுக்கு வராததால், அவரது தாய் விஜயலட்சுமி சென்னை பீளமேடு போலீஸில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி ஏரிக்கரை அருகே விளைநிலத்தில் அழுகிய சடலம் கிடப்பதாக சிவாவின் தாய் விஜயலட்சுமிக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவர் வந்து பார்த்து, அது சிவாவின் சடலம்தான் என்பதை உறுதி செய்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து சிவா எதற்காக உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சிக்கு வந்தார். அவரை யாராவது கொலை செய்து சடலத்தை வீசிச்சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.