அவலூர்பேட்டையில் வீட்டில் 90 கேன்களில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேல்மலையனூர் தாலுகா, அவலூர்பேட்டையில் சாராயம் விற்பனை தொடர்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் மத்திய குற்றப் புலனாய்வு தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன் அவலூர்பேட்டை மலையடிவாரம் மற்றும் ஏரி பகுதியிலிருந்து தலா 35 லிட்டர் கொண்ட 387 கேன்களில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போலீஸார் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, அவலூர்பேட்டையில் வசிக்கும் சின்னசாமி என்பவரது வீட்டில் தலா 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 90 கேன்களில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாராய வியாபாரிகள் செஞ்சி வட்டம், களையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், அவலூர்பேட்டை லோகநாதன், கணேசன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். தலைமறைவானவர்களை பிடிக்க காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.