ஆரோவில் அருகே ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன்(55). ஆலக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.14) வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினர். கதவைத் திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சம்.
மாதவன் வீடு, பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் மேல் தளத்தில் இருந்த கதவை நெம்பி திறந்து, அதன் வழியே உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.