திருவெண்ணெய்நல்லூரில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி
திருவெண்ணெய்நல்லூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் தொடக்கி வைத்த இந்தக் கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள், அரசுத் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றன. குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அளிக்கப்பட்ட நலத் திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகள் தொடக்கி வைப்பு போன்ற சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம், அம்மா உணவகம், அம்மா சிமென்ட், உப்பு, அம்மா குடிநீர் ஆகிய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு, விழுப்புரம் நகராட்சி குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய வட்டங்கள் தொடக்கம், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகள், இத்திட்டங்களை பெறுவதன் வழிமுறைகள் குறித்த புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என்.சிவகுரு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் லோகநாதன், ராம்பிரசாத் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். அரசுத் திட்டங்கள் குறித்து அறியும் பொருட்டு, கண்காட்சியை பொது மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.