விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் சுமார் 20 நாய்கள் திங்கள்கிழமை இரவு திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வண்டிமேடு, ராஜாமணி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திரளானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிந்தன.
வீடுகளிலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜமணி நகர் பகுதியில் திங்கள்கிழமை இரவு திடீரென 20-க்கும் மேற்பட்ட நாய்கள் அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழந்தன. இதில் வீட்டு நாய்கள் சிலவும் அடங்கும். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் விழுப்புரம் மேற்கு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், சம்பவம் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்தப் பகுதி தெருக்களில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜாமணி நகரில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்ற தெரு நாய்கள் தடையாக இருப்பதால், அவற்றை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.