அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் பயிலுவதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு (2018-19) மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. விண்ணப்பங்கள் செப்.19-ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இதற்கான விண்ணப்பம் விநியோகத்தை, மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.சங்கரநாராயணன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் சந்திரா, நிலைய மருத்துவ அலுவலர் மு.கதிர், நிர்வாக அலுவலர்கள் ம.ரா.சிங்காரம், கே.ஆனந்தஜோதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் ஜெ.முருகவேல், எஸ்.சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் பலர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
படிப்பு விவரங்கள்:
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஎஸ்எல்பி, பிஎஸ்சி ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியே பல்மனரி பெர்பியுஷன் டெக்னாலஜி, பிஓடி, பி.ஆப்தமாலஜி, பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, டையாலிசிஸ் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பிஎஸ்சி பிசிசியன் அசிஸ்ட்டண்ட், ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆக்சிடண்ட் அன்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சாதிச்சான்றிதழ் நகலை காண்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெறலாம். இதர வகுப்பினர் ரூ.400-க்கான கட்டணத்தை வங்கி வரையோலையாக வழங்கி, தினசரி அலுவல் நேரங்களில் பெறலாம். வங்கி வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செயலர், தேர்வுக்குழு, சென்னை 10. என்ற பெயரில் பெற வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்.20ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு சேர்க்கை செயலர், தேர்வுக்குழு, சென்னை 10- என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை அறிய www.health.org என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.